Tuesday, May 27, 2008

439. IPL கிரிக்கெட்டில் நேற்று!

முந்தைய பதிவில் உம்மாச்சியை வேண்டிக் கொண்டதன் தொடர்ச்சியாக நேற்றைய (ஜெயிக்க வேண்டிய) IPL ஆட்டத்தில், மும்பை அணி தனது "முழுத்திறமையையும்" வெளிப்படுத்தி, ராஜஸ்தான் ராயல் அணியிடம் தோற்றது.  சச்சினின் ஜாதக ராசி அப்படி, அவர் இந்தியாவுக்கு ஆடினாலும் சரி, மும்பைக்கு ஆடினாலும் சரி, அவர் ஓரளவு நன்றாக ஆடினால், அந்த ஆட்டம் கோவிந்தா தான் ;-)

சில தினங்களுக்கு முன் மொஹாலி அணியிடம் ஒரு ரன்னில் தோற்ற மும்பை அணி, நேற்று கடைசிப் பந்தில் ஆட்டத்தை கோட்டை விட்டது.  3 ஓவர்களில் 43 ரன்கள் தேவை என்ற நிலையில், பரபரப்பு காட்டாமல், சிறப்பாக ஆடிய நீரஜ் பட்டேலையும், ரவீந்திர ஜடேஜாவையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்! கடைசி ஓவரை ஜெயசூர்யாவோ, ஆஷிஷ் நெஹ்ராவோ வீசியிருந்தால், மும்பை வெற்றிக்கு வாய்ப்பு இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.  Retrospective Analysis-இல் எ.அ.பாலாவை மிஞ்ச ஆள் கிடையாது என்று யாரோ முணுமுணுப்பது காதில் கேட்கிற மாதிரி இருக்கிறது :)

இந்த மும்பைத் தோல்வியால் தில்லி அணிக்கு லாபம், அவ்வணி அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது !!!  சேவாக் வார்னுக்கு நன்றிக்கடன் பட்டவராகி விட்டார் :) இப்போது, அரைஇறுதி சுற்றில் நான்காவது அணியாக தேர்வாகப் போவது சென்னையா, மும்பையா என்பது தான் கேள்வி!  இன்றைய ஐதரபாதுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றால், மும்பைக்கு (அவ்வணி தனது அடுத்த ஆட்டத்தில் வென்றாலும்!) சங்கு ஊதப்படும்!

சச்சினும், மும்பையும் இருக்கிற கடுப்பில், பெங்களூருக்கு எதிரான இறுதி ஆட்டத்தில், பெங்களூரை மும்பை மிதித்துத் தேய்த்து விடும் அபாயம் இருப்பதால், மும்பை பெங்களூரிடம் தோற்று அதனால் சென்னை அணி  அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்று நம்புவதைக் காட்டிலும், "நம் கையே நமக்குதவி" என்ற பழமொழிக்கு ஏற்ப, இன்றே ஐதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்று சென்னை தகுதி பெறுவதே சிலாக்கியமான ஒன்றாகத் தோன்றுகிறது. 

மேலும், லட்சுமி ராய் ஆட்டத்தைப் பார்க்க இன்று ஐதரபாத்துக்கு செல்ல மாட்டார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ;-)  அதனால், கேப்டன் தோனி கவனம் சிதறாமல் ஆடி, சென்னை அணிக்கு வெற்றிக் கனியை பறித்துத் தருவார் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது :)

எ.அ.பாலா

Monday, May 26, 2008

438. IPL 20-20 கிரிக்கெட் - தாதா,சென்னை,தோனி,லட்சுமி ராய் ...

IPL கிரிக்கெட் ஆட்டங்களை தொடர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தாலும், ஆபீஸ் வேலை சற்றே கடுப்படிப்பதாலும், தோள்பட்டை சம்பந்தப்பட்ட ஒரு புது வியாதி (Peri Arthritis) என்னை பாடாய் படுத்துவதாலும், குறிப்பிடத்தக்க சில IPL ஆட்டங்கள் (மும்பை அணியை ஒரு ரன்னில் மொஹாலி அணி வென்ற ஆட்டம் போல...) பற்றி பதிவெழுத முடியாமல் போனது.

கொல்கத்தா - மொஹாலி அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஆட்டத்தில், பாய்காட் அவரை 'பிரின்ஸ் ஆப்ஃ கல்குட்டா' என்றழைப்பதற்கும், பெங்காலியர்கள் அவரை 'தாதா' என்று மாய்ந்து போவதற்கும் ஆன காரணத்தை விளக்கும் வகையில் கங்குலி ஓர் அதிரடி ஆட்டம் ஆடியதில்,(மிக உறுதியான!) தோற்கும் சூழலிலிருந்த கொல்கத்தா, கடைசி 5 ஓவர்களில் 71 ரன்களை ஈட்டி அபார வெற்றி பெற்றது.

Ganguly's final assault literally turned the match on its head ! இர்பான் பதான் வீசிய இறுதி ஓவரில் கங்குலியின் விளாசல், வெற்றிக்குத் தேவையான 15 ரன்களை (இதில் 2 சிக்ஸர்கள்) நான்கே பந்துகளில் பெற்றுத் தந்தது. ஈடன் கார்டன் அரங்கில் எழுந்த பேரிரைச்சல், எரிமலை வெடித்தது போல இருந்தது. இந்த மகத்தான வெற்றியின் மூலம் கொல்கத்தா அரை இறுதிக்கு தகுதி பெறவில்லை என்றாலும், "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" என்பது கங்குலிக்குப் பொருந்தும் !!!

சனிக்கிழமை நடந்த சென்னை-ஜெய்ப்பூர் ஆட்டமும் விறுவிறுப்பாக இருந்தது. ஜெய்ப்பூரின் 211 ரன்களை சென்னை அணி சிறப்பாகவே 'துரத்தியது', ஆனாலும், 201 ரன்கள் எடுத்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்திலும், (கொல்கத்தா-மொஹாலி ஆட்டம் போலவே!) கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் சென்னைக்கு வெற்றி என்ற நிலை இருந்தது. கங்குலியைப் போல நமது கேப்டன் தோனி கடைசி வரை நின்று ஆடவில்லை என்பது பெரிய குறை. தோனிக்கு லட்சுமி ராயை சந்திக்க வேண்டிய அவசரம் போலும் ;-) முக்கியமான கட்டத்தில், 18-வது ஓவரில் விக்கெட்டை பறி கொடுத்து விட்டார் !!! கிரிக்கெட் பற்றி ஒரு இழவும் தெரியாத லட்சுமி ராய் மற்றும் சில கோலிவுட் குமரிகள் சேப்பாக்கம் பக்கம் வராமல் இருந்திருந்தால், தோனி நிதானமாக ஆடியிருப்பாரோ ????

சனிக்கிழமை நடந்த 2-வது IPL ஆட்டத்தில் (மும்பை vs தில்லி) மும்பை வென்றிருந்தால், சென்னைக்கு கொண்டாட்டமாக இருந்திருக்கும். அன்றே அரை இறுதிக்கு (ஐதராபாதுடனான அடுத்த ஆட்டத்தில் நாம் தோற்றாலும் கவலையில்லை!) சென்னை தகுதி பெற்றிருக்கும் ! தில்லிக்கு ஆடும் தமிழ்நாட்டுக்காரர் தினேஷ் கார்த்திக் தனது 15 நிமிடப் புகழுக்கு அந்த தினத்தை தேர்வு செய்ததில், மும்பை மண்ணைக் கவ்வி, அரை இறுதித் தேர்வுக்கு, நமது மற்றும் மும்பை அணிகளின் வாய்ப்பு கவலைக்கிடமாகி விட்டது !!! சென்னையின் இந்த ரெண்டுங்கெட்டான் நிலைமைக்குக் முக்கியக் காரணம், ஜெயிக்க வேண்டிய (பெங்களுருக்கு எதிரான) ஆட்டத்தில், உயிரைக் கொடுத்து தோற்றது தான், chennai snatched Defeat from the Jaws of Victory :( அந்த ஆட்டத்திற்கும் லட்சுமி ராய் வந்திருந்து தையத்தக்கா என்று குதித்ததில், தோனி சரியாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது !!!

சென்னையின் நெட் ரன்ரேட் மைனஸில் இருப்பதால், ஐதராபாதுடனான அடுத்த ஆட்டத்தில் நாம் வெற்றி பெற்றால் தான் அரை இறுதிக்கு தகுதி பெறலாம். இல்லையெனில், மும்பை அடுத்த 2 ஆட்டங்களிலும் தோற்க வேண்டும் என்று ஒம்மாச்சியை வேண்டிக் கொள்ளலாம் :)

எ.அ.பாலா

437. கன்னட வெறியர் மற்றும் நடிகர்கள் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் தோல்வி

தட்ஸ்டாமில்.காம் வலைத்தளத்தில் வந்துள்ள ஒரு செய்தியை கீழே தந்துள்ளேன்.  வா(மு)ட்டாள் நாகராஜ் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்துள்ளார்.  பல கன்னட நடிகர்களும் தோல்வி அடைந்துள்ளனர்.  இதிலிருந்து இரண்டு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

1. பெரும்பாலான கன்னடர்கள் மற்றொரு (தமிழ்நாடு) மாநில மக்களுக்கு எதிரான வெறிச் செயல்களை தூண்டி விடுபவர்களை புறக்கணிக்கின்றனர். அவர்கள் அண்டை மாநிலத்தவருடன் சுமுகமான உறவையே விரும்புகின்றனர்.  தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல்வியாதிகள் தான் வெறுப்புக்கு தூபம் போட அலைகின்றனர் :(

2. தமிழ்நாட்டில் நிலவுவது போல, கர்நாடகத்தில் சினிமா மோகம் தலை விரித்து ஆடவில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.  Rajkumar was an exception !

இனி செய்தியை வாசிக்கவும்.
************************

வாட்டாள் நாகராஜ் தோல்வி-டெபாசிட்டையும் இழந்தார்
திங்கள்கிழமை, மே 26, 2008
  
     
பெங்களூர்: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ், டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தார்.

கன்னட சளுவாளி இயக்கம் என்ற அமைப்பின் தலைவர்தான் வாட்டாள். இதுதவிர கர்நாடக எல்லைப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

தமிழர்களுக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்தி வருபவர் வாட்டாள். தமிழர்களுக்கு எதிரானவர். சமீபத்தில் கூட ஓகனேக்கல் விவகாரத்தில் போராட்டம் நடத்தியவர்.

முன்னாள் எம்.எல்.ஏவான வாட்டாள், சமீபத்திய சட்டசபைத் தேர்தலில் சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில், புட்டரங்க ஷெட்டி, பாஜக சார்பில், மகாதேவ் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஷெட்டி வெற்றி பெற்றார். வாட்டாள் நாகராஜ், வெறும் 11, 413 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட்டைப் பறிகொடுத்து படுதோல்வி அடைந்தார்.

பாட்ஷா நடிகர் தோல்வி:

தேர்தலில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பல நடிகர்களும் போட்டியிட்டனர். இவர்களில் நடிகர் ஜக்கேஷ் தவிர மற்ற அனைவருமே தோல்வியைத் தழுவியுள்ளனர்.

காங்கிரஸ் எம்.பியான அம்பரீஷ், ஸ்ரீரங்கப்பட்டணா தொகுதியில் போட்டியிட்டார். காவிரிப் பிரச்சினையின் போது தனது மத்திய அமைச்சர் பதவியை உதறியவர் அம்பரீஷ். ஆனால் காவிரிப் படுகையில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பாட்ஷா படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்திருந்த நடிகர் சசிகுமார், காங்கிரஸ் வேட்பாளராக செல்லகரே தொகுதியில் போட்டியிட்டார். அவரும் தோற்றுப் போய் விட்டார்.

காமெடி நடிகை உமாஸ்ரீயும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.

இதேபோல நடிகர் சாய்குமார் பாஜக வேட்பாளராக பாகேபள்ளி தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். இயக்குநர் - நடிகர் மகேந்தர், கொள்ளேகால் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.

காமெடி நடிகரும், ரஜினியைப் போலவே இமிடேட் செய்து நடிப்பவருமான ஜக்கேஷ் மட்டும் இத்தேர்தலில் வெற்றியை சுவைத்துள்ளார். இவர் துருவகரே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

9வது முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் தரம்சிங இத்தேர்தலில் வென்றிருந்தால் சாதனை படைத்திருப்பார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தோல்வியுற்று விட்டார். அதே சமயம், 9வது முறையாக போட்டியிட்ட மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றார்.

இருப்பினும் கடந்த 8 முறை ஒரே தொகுதியில் போட்டியிட்ட கார்கே இந்த முறை தொகுதி மாறி போட்டியிட்டதால் அவருக்கு சாதனை படைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
******************************

நன்றி: தட்ஸ்டாமில்.காம்

Thursday, May 08, 2008

436. செல்லாது! செல்லாது! - வேணுகோபால் பணி நீக்கம் பற்றி சுப்ரீம் கோர்ட்

வேணுகோபால் நீக்கம் சட்டவிரோதம்-சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
டெல்லி: டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக (எய்ம்ஸ்) இயக்குநர் பதவியிலிருந்து டாக்டர் வேணுகோபாலை நீக்க வகை செய்யும் சட்டத் திருத்தம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

எய்ம்ஸ் இயக்குநராக இருந்து வந்த டாக்டர் வேணுகோபாலுக்கும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது பெரும் மோதலாக வெடித்தது.

இந்த நிலையில், எய்ம்ஸ் மாணவர்கள், வேணுகோபாலுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர். இதற்கு வேணுகோபால்தான் காரணம், அவர்தான் போராட்டத்தைத் தூண்டி விட்டு வருகிறார் என்று அன்புமணி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மேலும், வேணுகோபாலுக்கு எதிராக தீவிர நடவடிக்கையிலும் இறங்கினார் அன்புமணி. அதன் உச்சகட்டமாக நாடாளுமன்றத்தில் வேணுகோபாலை பதவியிலிருந்து நீக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றினர்.

அதன்படி 65 வயதை டாக்டர் வேணுகோபால் தாண்டி விட்டதால், அவர் இயக்குநர் பதவியில் நீடிக்க முடியாது என்று கூறி இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதை எதிர்த்து டாக்டர் வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது என்று இன்று அதிரடித் தீர்ப்பை அளித்தது.

வேணுகோபால் தாக்கல் செய்த மனுவில், தனது பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை இருப்பதாகவும், இந்த நிலையில் சட்டத் திருத்தம் மூலம் தன்னைப் பதவி நீக்கம் செய்தது செல்லாது என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி, ஹரிஜித் சிங் பேடி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது, இது சட்டவிரோதமானது. மனுதாரரை மட்டுமே குறி வைத்து இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மிகவும் பாரபட்சமாக, தன்னை குறி வைத்து இந்த நடவடிக்ைக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மனுதாரர் கூறியதை இந்த நீதிமன்றம் ஏற்கிறது.

இந்த வழக்கிலும், எய்ம்ஸ் ஊழியர் சங்கம் தாக்கல் செய்துள்ள இதே வழக்கிலும் இறுதித் தீர்ப்பு வரும் வரை இயக்குநர் பதவிக்கு நிரந்தரமாக யாரையும் மத்திய அரசு நியமிக்கக் கூடாது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து எய்ம்ஸ் இயக்குநராக டாக்டர் வேணுகோபாலை மீண்டும் நியமிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஜூலை மாதம் வரை அவர் தொடர்ந்து பதவி வகிக்கவும் மத்திய அரசு அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வேணுகோபாலை பதவியிலிருந்து நீக்கிய பின்னர் டாக்டர் டோக்ரா இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

நன்றி: thatstamil.oneindia.in


டெயில் பீஸ்:

இத்தீர்ப்பு பாராளுமன்ற முடிவுக்கு எதிரானது போல் தோன்றினாலும், அமைச்சர் அன்புமணி, வேணுகோபாலை விரட்டுவதற்காகவே, இந்த சட்டத் திருத்தத்தை பாராளுமன்றம் முன் வைத்து அது நிறைவேற்றப்பட்டது என்பது தெளிவாகவே தெரிகிறது! வேணுகோபாலோடு முட்டிக் கொள்வதற்கு முன்பாகவே, அமைச்சர் இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வந்திருந்தால், சுப்ரீம் கோர்ட் 'சட்டத் திருத்தம் செல்லாது' என்று கூறியிருக்காது. அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை, தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகளுக்கு இடம் தரும் வகையில் பயன்படுத்தக் கூடாது என்பது இத்தீர்ப்பின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வேணுகோபாலின் பதவிக் காலம் இன்னும் 2 மாதங்களில் (ஜூலை 2008) முடிவுக்கு வருகிறது, நல்ல வேளை தீர்ப்பு அதற்கு முன்பே வந்து விட்டது :)

தற்போது அமைச்சர், 'இது மத்திய அரசின் முடிவு, எனது தனிப்பட்ட முடிவு அல்ல, அதனால், இந்த தீர்ப்பு தொடர்பாக தான் பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று கூறியதாக ஒரு செய்தியில் வந்திருக்கிறது. (CNN-IBN).

வேணுகோபால் தொடர்பான எனது முந்தைய பதிவுகள்:
http://balaji_ammu.blogspot.com/2006/07/blog-post_07.html
http://balaji_ammu.blogspot.com/2006/07/blog-post_09.html

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails